வீடியோ மாரியம்மன்
புத்தகத்தின் பெயர்: வீடியோ மாரியம்மன்
ஆசிரியர்: இமையம்
எனக்கு பிடித்தமான எழுத்தாளர்களுள் ஒருவர் இமையம். இவர் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு விஷயத்தை சொல்லக்கூடியதாகவும் இருக்கும். அப்படி ஒரு ஆற்றல் மிக்க எழுத்தாளர். இவர் எழுதிய நாவல்கள் வாசிக்கும் பொழுது நாம் அந்த கதை கருக்குள்ளே சென்று விடுவோம் .அப்படிப்பட்ட ஒரு எளிய நடையில் நாவல்களையும் சரி சிறுகதைகளையும் சரி எழுதியிருப்பார். அப்படி எளிமையாக எழுதிய ஒரு சிறுகதை தொகுப்பு தான் வீடியோ மாரியம்மன் .
இந்த சிறுகதையில நான் ரொம்ப வியப்படைஞ்சி ஆச்சரியத்தோடும், அழுகையோடும் படித்த சிறுகதைகள் என்னென்ன அப்படின்னா.. வீடியோ மாரியம்மன், நல்ல சாவு, அம்மா, எழுத்துக்காரன், சத்திய கட்டு, ஊர் வம்பு.
வீடியோ மாரியம்மன் சிறுகதைல, ஒரு பக்கம் சாமியை ஊர்வலம் கூட்டிட்டு போவாங்க. அங்க ஒரு பிரச்சனை நடக்கும். என் தெருக்குள்ள நீங்க ஏன் வர மாட்டீங்க, சாமியையும் கூட்டிட்டு வர மாட்டீங்க? வந்து தான் ஆகணும். அதுக்கு தானே வரி எல்லாம் தரும் அப்படின்னு சண்டை போடுவாங்க..
இன்னொரு பக்கம் வீடியோ படம் காட்ட வர்றவர், சீக்கிரம் சாமியை கொண்டு வாங்க அப்பதான் வீடியோ படம் காட்ட முடியும். இல்லன்னா படம் காட்ட முடியாது அப்படின்னு சொல்லுவாரு.
இதுக்கெல்லாம் நடுவுல என்னென்ன நடக்குது. இந்த படத்தை காட்டுவாங்களா? மாட்டாங்களா? சாமியை கொண்டு வருவாங்களா? மாட்டாங்களா? அப்படின்னு இந்த சிறுகதையில சொல்லுவாங்க...
இன்னொரு சிறுகதை அம்மா. இந்த கதையை படிக்கும் பொழுது படிக்கக் கூடிய வாசகர்களுக்கு கண்ணுல இருந்து கண்ணீர் வரக்கூடிய அளவுக்கு இந்த கதை இருக்கும். அந்த அளவுக்கு உணர்வுபூர்வமா எழுதி இருக்காரு ஆசிரியர்.
ஒரு அம்மா ஒரு மகன் . மகன் வெளியூர்ல வேலை செய்வாங்க. அம்மா ஒரு கிராமத்துல காட்டு வேலை, கழனி வேலை செஞ்சுகிட்டு அவங்களோட பொழப்ப ஓட்டிட்டு இருப்பாங்க.
அந்த காலத்துல போன் இதெல்லாம் இல்ல. அதனால லெட்டர் தான். அம்மாவுக்காக அவங்க மகன் வெளியூர்ல இருந்து எழுதக்கூடிய கடிதமும், மகனுக்காக அம்மா இந்த ஊரில் இருந்து எழுதக்கூடிய அந்த கடிதமும் படிக்க ரொம்பவே கண்ணீரும் கவலையுமா இருக்கும்.
இந்த கதையை படிக்கும் போது அந்த கதைக்கருக்குள்ளவே நாம போற மாதிரியும், நாமலே அந்தக் கதையோட கதாபாத்திரங்களா வாழ்ற மாதிரியும் ரொம்பவே அழகா எழுதியிருப்பாரு...
இந்த கதையில என்ன ஒரு முக்கியமான விஷயம் அப்படின்னா தன்னுடைய மகனுக்காக அம்மா, ஒரு பையன் கிட்ட கடிதத்தை எழுத சொல்லுவாங்க.
நிறைய சொல்லுவாங்க அங்க கடன் வாங்கி இருக்கேன், இங்க கடன் வாங்கி இருக்கேன் அப்படின்னு சொல்லுவாங்க..
இதுல ஒரு உருக்கமான விஷயம் என்னன்னா..
" ஒன்னே ஒன்னு தான். என் மனசுல இருக்கு. நான் செத்தா என் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும். தேர் பாட கட்டு. ஒப்பனுக்கு கட்டுனா போல. உள்ளூர் பறை மோளத்தோட, பாசாறு தம்ரு மோளம வை. கொல்லு காசி பிரிக்கையில, கை கூசாம தோட்டி, தொம்பன், வண்ணா, கூத்தாடின்னு காசியை கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத. நம்ம ஊட்டுல என் சாவு தான் கடைசி சாவு. கயிதூரு ஆட்டக்காரி செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்கு கர்ண மோட்சம் கூத்து வைக்காமல் விட்டு விடாதே.."
இப்படி அந்த அம்மா அவங்க மகனுக்காக இந்த கடிதத்தில் எழுதி இருப்பாங்க.
கடைசியில அந்த கடிதம் எழுதுற பையன் எல்லாம் எழுதி ஆச்சு எனக்கு நேரமாச்சு அப்படின்னு சொல்லிட்டு அந்த கடிதத்தை படிச்சு கவர்ல போட்டுடுவான்..
அதுக்கு அந்த அம்மா சொல்லிட்டு போவாங்க, என்ன எழுதிருப்ப நீனு,
இங்க நான் நல்லா இருக்கேன். நீ அங்க நல்லா இருக்கியா. எப்போ ஊருக்கு வர. திருவிழா எல்லாம் இருக்க போகுது அப்படின்னு தான எழுதி இருப்ப,எல்லாம் எங்களுக்கு தெரியும் அப்படின்னு சொல்லிட்டு போவாங்க.. இப்படி நகைச்சுவையாக இந்த கதையை வந்து முடிப்பாரு ஆசிரியர்.
இப்படி ஒவ்வொரு கதையிலும், ஒவ்வொரு கருத்தையும்,ஒவ்வொரு கதாபாத்திரங்களையும், அழகாகவும், எளிமையாகவும், வடிச்சிருப்பாரு இமையம்.
படிக்கக்கூடிய வாசகர்களுக்கு எல்லாமே எளிமையா புரியிற மாதிரி இவருடைய எழுத்துக்கள் இன்னுமும் இருந்துட்டு இருக்கு. அதேதான் இந்த சிறுகதையிலும், அப்படியே மாறாம இருக்கு.
வீடியோ மாரியம்மன் சிறுகதை எல்லாரும் படிக்க வேண்டிய ஒரு தொகுப்பாக வலம் வந்துட்டு இருக்கு. அதுலயும் இதுல எனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அம்மா என்ற சிறுகதை தான். அதனால எல்லாரும் இந்த புத்தகத்தை நேரம் இருக்கிறப்ப கிடைக்கும்போது வாங்கி படிங்க. கண்டிப்பா இது வாசகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும் பயனுள்ளதாக இருக்கும்....
- எழில் ஆதித்தமிழன்

Comments
Post a Comment